3

11 மணி வெயிலின் சூடு காலைத்தாக்க, ‘உச்‘ என்ற சப்தத்துடன் அலுத்துக்கொண்டார் காமராஜ்.

“தாத்தா! 17 பஸ் போயிடுச்சா?“

“சாதா பஸ் போச்சுன்னு சொன்னாங்க! நானும் அதுக்குத்தான் நிக்கறேன்!“

“என்ன! கொடியைத் தலைகீழாகப் பின் பண்ணியிருக்கே?“

“அதுவா! ப்ச்! அப்பா பின் பண்ணச் சொன்னாரு. சரியா நான் பின் பண்ணலையா? நல்லவேளை! சொன்னீங்க! இல்லைன்னா என் ஃப்ரெண்ட்ஸ் சிரிச்சுருப்பாங்க!“

“ஸ்கூல்ல கொடி ஏத்திட்டு திரும்பறியா!“

“இல்ல தாத்தா! எங்க ஸ்கூல்ல எல்லாரையும் கூப்பிட மாட்டாங்க! “………………………..“

“என் ஃப்ரெண்ட் இருக்கற தெருல இன்னைக்கு இண்டிபென்டன்ஸ் டே செலிப்ரேஷன். அங்க இருக்கற ஒரு அஸோஸியேஷன் மூலமா ஒரு ப்ரோக்ராம்“.

காமராஜுக்கு தன் பையிலிருக்கும் ஸ்வீட்டை எடுத்து அந்தச் சிறுவனிடம் கொடுக்கும் ஆவல் மனசுக்குள் எழுந்தது. இருந்தாலும், பஸ் ஸ்டாப்பில் நின்று சிறுவனிடம் கொடுப்பதும் பேசுவதும் சரியாயிருக்காது என்றெண்ணி பஸ் வருகிறதா? எனப் பார்த்தார் காமராஜ். பழ வண்டிக்காரனிடம் வாங்கிய பழங்களும் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து வைத்த மில்க் ஸ்வீட் பையும் கையைக் கனக்கச் செய்தன.

பிளாட்ஃபார்ம் நிறைய முளைத்த தள்ளுவண்டிக்கடைகள் மனிதர்களை நடுரோட்டில் நடக்கச் செய்ததைக் கவனித்தபடி நின்றிருந்தார்.

சரேலென இடிக்கும்படி தன் பக்கத்தில் வந்து நின்ற காரை எரிச்சலுடன் பார்த்தார் காமராஜ்.

“என்ன பஸ்ஸுக்கா காமராஜ்! பாத்து ரொம்ப நாளாச்சே! நெறைய சேஞ்சஸ் உங்கிட்ட எனக்குத் தெரியுதே!“ குளிர்பதன வசதியுடன் கூடிய அதிநவீன சொகுசுக் கார் கண்ணாடியை இறக்கியபடி, கதவைத் திறந்தபடி வந்த நேருவை உற்றுப் பார்த்தார் காமராஜ்.

“நீ சக்கரைப் பொங்கல் எடுத்துட்டுப் போறியா?“

“எதுக்கு?“ கையை ஆதுரத்துடன் தடவியபடி, மறந்துடு.

“மறக்கக்கூடியதா நேரு! அந்தக்கால இன்டிபெண்டன்ஸ்டே செலிப்ரேஷன்“

“சரி! அதெல்லாம் அந்தக்காலம்! இன்னைக்கு என்ன இந்தப்பக்கம்? வீடு இங்க வாங்கிட்டு வந்துட்டாலும் கோயிலுக்குப் பழமும், ஸ்வீட்டும் அப்பப்ப பண்டிகைன்னா எடுத்துண்டு போவேன். இன்னைக்குன்னு பாத்து டிரைவர் வரலை. பேரன் டிவில ஏதோ சினிமான்னு டிரைவ் பண்ண வர மாட்டேன்னு சொல்லிட்டான். ஒண்டிக்கட்டை! அவ போனதுக்கப்புறம் நான் டிரைவ் பண்றதில்லை!“

“அதான் பஸ்ல போயிடலாம்னு வந்தேன். செருப்பு போட மறந்துட்டேன்.“

“உன் போலீஸ் டூயூட்டிக்கு இன்னைக்கு லீவா?“

“வேலை எங்க என்னை விடும்? நானா தான் லீவு போட்டிருக்கேன். பேத்தி பிறந்திருக்கா எனக்கு! நாலு நாளா பாக்கப் போகலை! அவ்வளவு பிசி! இன்னைக்கும் போகலைன்னா அவ்வளவு நல்லாயிருக்காதுன்னு கிளம்பினேன். வழியில பழவண்டிக்காரனைப் பார்த்தேன். இவர் அப்பா அந்தக்காலத்து சுதந்திரப் போராட்ட வீரர். ரொம்ப நாளா இவருக்கு நான் ஒரு ரெகுலர் கஸ்டமர். எனக்குன்னா ரெண்டு பழம் கூடப் போட்டுத் தருவார்.

எங்கோ ‘ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!‘ பாட்டின் ஒலியை ரசித்தபடி இருந்த பையனை வினோதமாகப் பார்த்தார் காமராஜ்.

“என்ன தாத்தா பாக்கறீங்க! பஸ் வர்ற வழியாத் தெரியல?“ “இந்த சாங் எங்க தாத்தாவுக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்குக்கூட ரொம்பப் பிடிக்கும்“.

“மொபைல்ல ஃபோன் பண்ணி அப்பாவை வரச்சொல்லி வண்டில போலாம்ல. என்கூட கார்ல வேணும்னா வர்றியா?“

என்னிடம் மொபைல் கிடையாது. நாட் அலவ்ட் ஃபார் சில்ட்ரன்னு அப்பா சொல்லிட்டார்.

“நோ தாங்ஸ் போலீஸ் தாத்தா!. தகுதிக்கு மீறி ஆசைப்படறது தப்புன்னு எங்க தாத்தா சொல்லியிருக்கார்“.

“இன்னைக்குக் கார்ல போனா நாளைக்கும் அதே சுகம் கேட்கும்னு நினைக்கறியா“ நேரு கேட்டது சிறுவன் காதுக்குச் சென்றதோ இல்லையோ! அதையும் மீறிய பலத்த அடி விழும் ஓசை கேட்டது.

“விடு! விடு! ஏம்பா அடிக்கற?“ எனக் கேட்டார் காமராஜ்.

“பின்ன என்ன சார்! நானும் எம் பொஞ்சாதியும் கஷ்டப்பட்டு பழத்தை அடுக்கி வைச்சுட்டு உக்காந்துருக்கோம். நைசா லபக்குன்னு ஒரு ஆப்பிள் பழத்தை எடுக்குறான்“.

“பசிக்குதுன்னு எடுத்தேன். திருடலை! நாளைக்குக் காசு கொடுத்துடுடலாம்னு நினைச்சேன். சின்ன பழந்தானே, அண்ணே! அதுக்குள்ள….“

“ஒறவு மொறை சொல்ற லட்சணத்தைப் பாருங்க பிச்சைக்காரப்பய!“ என்னவோ கூடப்பிறந்த பொறப்பு மாதிரி!“

“கிழிஞ்ச சட்டை போட்டிருக்கேன்னு தானே பிச்சைக்காரப்பயன்னு சொல்ற!“

“ஐ யம் பி.எஸ்.ஸி மேத்ஸ் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிராஜூவேட் தெரியுமா?“

“எல்லாந் தெரியுண்டா?“ இங்க வளந்தவந் தானே!

17 பஸ் வந்து நின்றும் யாரும் ஏறவில்லை.

“நீ கிராஜுவேட்டாயிருந்தாலும் திருடித் திங்கறது தப்பில்லையா?“

“போலீஸ்ல பிடிச்சிக் குடுக்கணும் இவனை! பத்து ரூபாய் கொடுத்து ஒத்த பழம் வாங்க வக்கில்லை“.எனக் கூறிய காதில் மாட்டலுடன் கூடிய ஜிமிக்கி அணிந்த பழவண்டிக்காரனின் மனைவியை வெறிக்கப் பார்த்தார் நேரு.

ரோட்டைத் தாண்டிய எதிர்ப்புறம் சாக்கடையை ஒட்டிய இடத்தில் கிழிசல் சட்டையைப் பார்த்தபடி 30 வயதுக்குரிய உடல் வளர்ச்சி எதுவுமின்றி சக்கர நாற்காலியில் துணியால் இறுகக்கட்டி வாயில் எச்சில் ஒழுகிய மனித ஜந்துவின் கண்ணில் கண்ணீர்.

“காமராஜ்! நீ வண்டில ஏறிக்க! தம்பி நீயும் வா! “உன் பேரென்ன?”

“கல்கி தாத்தா”.

இன்னைக்கு ஒரு நாளைக்கு உன் அப்பா கொள்கைய விட்டு வர்றதாலே ஒண்ணும் ஆயிடாது. காமராஜின் பழப்பை அவருக்கு இப்போது முன்னைவிடக் கனமாகத் தெரிந்தது.

“தாத்தா! இந்தப் பழங்கள் யாருக்கு?” என்றான் கல்கி.

ஏதோ புரிந்தது போல்… கடவுளுக்குப்பா! என்றார் காமராஜ்.

“நான் ஒண்ணு எடுத்துக்கட்டுமா?“

“நான் இந்தப்பழ வண்டில வாங்கலைப்பா. நீ தாராளமா எடுத்துக்க!“

ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, கிழிந்த சட்டை மாட்டியவனைக் கண்களால் தேடினான். அசோக் பில்லர் தூணை வெறித்தபடி அம்மன் கோயில் சுவரில் ஒண்டிக்கிடந்தவனிடம், “இந்தாண்ணா! வாங்கிக்கோ!” எனப் பெரியவரிடம் வாங்கிய பழத்தைக் கொடுத்தான் கல்கி.

“நாளைக்கு எங்க வீட்டுக்கு வாங்க! இது எங்க அப்பாவோட விசிட்டிங் கார்டு. இதுல எங்க வீட்டு அட்ரஸ் இருக்கு. எனக்கு மேக்ஸ் டியூஷன் எடுக்கறீங்களா? நான் மேக்ஸ்ல ரொம்ப வீக்!“ என்ற கல்கியை உணர்ச்சி மேலீட்டால் கட்டித் தழுவிக் கொண்டான் கிழிசல் சட்டைக்காரன்.

“தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற வரிகள் ஏனோ நேருவுக்கு அந்த நேரத்தில் நினைவுக்கு வந்தது. “காமராஜ்! அந்தக் கல்கியைக் கூப்பிடு! போலாம். அந்தப் பையனுக்கு யார் அந்தப் பேர் வைச்சான்னு கேட்கணும்.

“நீ எங்கே பழம் வாங்கினே? சொல்! அங்கேயே காரை நிறுத்தி வாங்கிடலாம்“.

“ஆமாம்! ஆமாம்! என்பது போல் காரின் முன்பக்க பளிங்குப் பொம்மை காந்தி பொக்கை வாயைத் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

License

Share This Book